14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபல்பூருக்கு அருகே கரையை கடந்தது.;
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கோபல்பூருக்கு அருகே கரையை கடந்தது.
சவுராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று குஜராத்தின் துவாரகாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலைப்பெற்றுள்ளது. இது இன்று புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர், அடுத்த 24 மணிநேரத்தில் சற்று மேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு - தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
அதேவேளை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.