துருக்கியில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மேயர் உள்பட 40 பேர் கைது

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இமாமோக்லுவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-08-16 07:47 IST

அங்காரா,

துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் எக்ரெம் இமாமோக்லு. பிரதான எதிர்க்கட்சி தலைவரான இவர் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் அதிபர் தாயீப் எர்டோகனின் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். இதற்கிடையே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இமாமோக்லுவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை தொடர்பாக தற்போது பியோக்லு நகர மேயர் இனான் குனே, அவரது உதவியாளர், ஆலோசகர் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினரை குறிவைத்து நடைபெறும் இந்த கைது நடவடிக்கை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் தற்போது கைது செய்யப்பட்ட பியோக்லு நகர மேயர் இனான் குனே, 16வது மேயர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்