25 சதவீத கூடுதல் வரி நோட்டீஸ் பிறப்பித்த அமெரிக்கா; பிரதமர் மோடி கொடுத்த பதிலடி என்ன?

சிறு தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஒருபோதும் தீமை ஏற்பட மத்திய அரசு விடாது என பிரதமர் மோடி கூறினார்.;

Update:2025-08-26 11:04 IST

வாஷிங்டன்,

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது. இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்து உள்ளது. இந்த நடைமுறை நாளை (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் இன்று பிறப்பித்து உள்ளது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும்.

அந்த அறிவிப்பில், ரஷியாவால் அமெரிக்காவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக புதிய வரிவிதிப்புகள் அமல்படுத்தப்படும். இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இந்த நடைமுறை அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடி அதனை எதிர்கொள்வது பற்றி குறிப்பிட்டு பேசினார். அவர் குஜராத்தில் நிகோல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசும்போது, எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தபோதும், அதில் இருந்து மீண்டு வலிமையுடன் நாம் வருவோம் என குறிப்பிட்டார்.

சிறு தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஒருபோதும் தீமை ஏற்பட மத்திய அரசு விடாது என அப்போது அவர் கூறினார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டாலும் கூட அதற்கு மாற்று நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்