'யாரும் பயப்படவில்லை' அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை 24 மணிநேரத்தில் அறிவிப்போம் - காங்கிரஸ்

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை 24 மணிநேரத்தில் அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-01 12:24 GMT

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலின்போது உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கோட்டையாக உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார்.

அதேவேளை, காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் கடந்த தேர்தலின்போது ராகுல்காந்தி தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார்.

நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுகும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 24 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்ற முடிவை எடுக்க தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் அறிவிப்போம். யாரும் பயப்படவில்லை, யாரும் விட்டு ஓடவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்