முதல் டெஸ்ட்: இந்தியா சிறப்பான பந்துவீச்சு.. தோல்வியின் பிடியில் தென் ஆப்பிரிக்கா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்துள்ளது.;

Update:2025-11-15 16:44 IST

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Advertising
Advertising

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. ராகுல் 13 ரன்களுடனும் (59 பந்து, 2 பவுண்டரி), வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னுடனும் (38 பந்து) களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக ஜடேஜா தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்றினார்.

அந்த அணியில் ரிக்கல்டன் (11 ரன்), மார்க்ரம் (4 ரன்), முல்டர் (11 ரன்), டோனி டி சோர்ஜி (2 ரன்), ஸ்டப்ஸ் (5 ரன்) கைல் வெர்ரைன் (9 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர். தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் போராடி வருகிறார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த மார்கோ ஜான்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களுடன் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. பவுமா 29 ரன்களுடனும், கார்பின் போஷ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அக்சர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி வெறும் 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில் கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்