இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம்...நியூசிலாந்து கேப்டன்
இந்திய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.;
மும்பை,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாண்ட்னர் அதிகபட்சமாக 47 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் எடுத்தார்.
இதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், அபிஷேக் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் இந்திய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் 37 பந்துகளில் 82 ரன்களும், ஷிவம் துபே 18 பந்துகளில் 36 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் கூறியதாவது,
இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 200 அல்லது 210 ரன்கள் மட்டும் போதாது என்பதை அறிந்து, நாங்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக விளையாடி இருக்க வேண்டும்.நேற்று நாங்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளானோம், அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டு வர முயற்சிப்பது நல்லது. ஏனென்றால் மீண்டும் அதைச் செய்ய வேண்டியிருக்கும். இது ஒரு நல்ல விக்கெட் மற்றும் வேகமான அவுட்பீல்ட். பனி கடினமாக இருந்தது. ஒரு சுழற்பந்து வீச்சாளராக, பந்தைப் பிடிக்க முயற்சிப்பது சற்று சவால் தான். என தெரிவித்தார்.