திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி: ஐ.ஓ.பி. அணி வெற்றி
திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
3-வது திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஐ.ஓ.பி., ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, வருமான வரி (ஏ பிரிவு), இந்தியன் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், தெற்கு ரெயில்வே (பி பிரிவு) ஆகிய அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று தொடங்கியது. இதன் ஒரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை தோற்கடித்தது. இந்தியன் வங்கி அணியில் சோமன்னா 2 கோலும், ஸ்டாலின் அபிலாஷ் ஒரு கோலும் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஐ.ஓ.பி. 2-0 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை பதம் பார்த்தது. இன்னொரு ஆட்டத்தில் ஏ.ஜி.அலுவலக அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரியை வீழ்த்தியது. ஏ.ஜி. அலுவலக அணியில் முருகேஷ், வீரதமிழன், திஷூல் கணபதி கோல் போட்டனர்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஐ.ஓ.பி.-ஜி.எஸ்.டி. (பகல் 1 மணி), தெற்கு ரெயில்வே-ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 2.30 மணி), இந்தியன் வங்கி-வருமான வரி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.