உலக பாரா தடகளம்: டெல்லி நேரு ஸ்டேடியத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கடித்து குதறிய நாய்
உலக பாரா தடகள போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.;
Image Courtesy: PTI
புதுடெல்லி,
உலக பாரா தடகள போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 104 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அங்கு கென்யா நாட்டு பயிற்சியாளர் டென்னிஸ் மராகியா வீரருடன் பேசிக் கொண்டிருந்த போது அவரை தெருநாய் ஒன்று கடித்து குதறியது.
இதில் காலில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதுடன், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இதே போல் ஜப்பான் பயிற்சியாளர் மெய்கோ ஒகுமட்சூவை அணியினரின் பயிற்சியை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த போது நாய் கடித்துள்ளது.
இதையடுத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்புக்காக மைதான வளாகத்தில் நாய்களை பிடிக்க இரண்டு நாய்பிடி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.