காரைக்கால்: விடுதியில் துர்நாற்றம்... தற்கொலையா என சந்தேகித்து கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!


காரைக்கால்: விடுதியில் துர்நாற்றம்... தற்கொலையா என சந்தேகித்து கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
x

கழிவறையின் கதவை சினிமாவில் காட்டுவது போல் உடைத்துக் கொண்டு சென்ற போலீசாருக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரைக்கால்,

காரைக்காலில் உள்ள ஒரு தனியார் விடுதியில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து வந்த சுற்றுலா பயணி ஒருவர் தங்கியுள்ளார். அப்போது அவர் அறையில் உள்ள கழிவறையின் கதவு சரியாக இயங்காதது குறித்து விடுதி மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விடுதி நிர்வாகத்தினர் அந்த நபரை மற்றொரு அறையில் உள்ள கழிவறையை உபயோகித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த சுற்றுலா பயணி ஓரிரு தினங்களில் தனது அறையை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். இதனை விடுதி நிர்வாகத்தினர் அவர்களது பதிவேட்டில் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பயணி தங்கியிருந்த கழிவறையில் இருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியுள்ளது. இதனால் அந்த அறையில் தங்கியிருந்த நபர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என எண்ணி விடுதி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ், மோப்ப நாய் உள்ளிட்டவற்றுடன் சம்பந்தப்பட்ட விடுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பூட்டியிருந்த கழிவறையின் கதவை சினிமாவில் காட்டுவது போல் உடைத்துக் கொண்டு சென்ற போலீசாருக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கழிவறையின் உள்ளே யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், கழிவறையை முறையாக பராமரிக்காததே துர்நாற்றம் ஏற்படக் காரணம் என்பதும் அப்போது தான் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்காத விடுதி நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.


Next Story