"ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு'... பிரதமரின் பேச்சு முற்றிலும் பொய்" - பிரியங்கா காந்தி


ராமர் கோவிலுக்கு பாபர் பூட்டு... பிரதமரின் பேச்சு முற்றிலும் பொய் - பிரியங்கா காந்தி
x

காங்கிரஸ் கட்சி ராமர் கோவிலுக்கு ‘பாபர் பூட்டு’ போட்டுவிடும் என்ற பிரதமரின் கூற்று முற்றிலும் பொய்யானது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

லக்னோ,

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வருவதை தடுக்கவும், அயோத்தியில் 'பாபர் பூட்டு' போடுவதை தடுக்கவும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் பேச்சு முற்றிலும் பொய்யானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போடுவோம் என்ற பிரதமர் மோடியின் கூற்று முற்றிலும் பொய். நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என காங்கிரஸ் கட்சி பலமுறை கூறியிருக்கிறது. நாங்கள் இதை கடந்த காலத்தில் செய்துள்ளோம், எதிர்காலத்திலும் செய்வோம்.

ராகுல் காந்தி தனது பேச்சின்போது தினந்தோறும் அம்பானி மற்றும் அதானி குறித்து பேசி வருகிறார். தற்போது அம்பானி-அதானி குறித்து பேச வேண்டிய கட்டாயம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பேசுவதற்கு முன்பு அதை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல், தன் மனதிற்கு தோன்றியதை பிரதமர் மோடி பேசி வருகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக அவர் கூறும் எதுவும் அதில் இடம்பெறவில்லை."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story