ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
x
தினத்தந்தி 20 April 2019 6:23 PM GMT (Updated: 20 April 2019 6:23 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. #IPL2019 #KXIPVSDC

புதுடெல்லி,

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 37-வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.  

டாஸ் வென்ற  டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணியின் சார்பில் லோகேஷ் ராகுல், கிரிஸ் கெயில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ராகுல் 12 (9) ரன்களும், அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் 2(9) ரன்களும், டேவிட் மில்லர் 7(5) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த கிரிஸ் கெயில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 69(37) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய சாம் கர்ரான் (0) ரன் ஏதும் எடுக்காமலும், பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த மந்தீப் சிங் 30(27) ரன்களும், கேப்டன் அஸ்வின் 16(14) ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் ஹர்பிரித் பிரர் 20(12) ரன்களும், விஜோயின் 2(3) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பிரித்வி ஷா 13(11) ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகார் தவான் தனது அரை சதத்தை பதிவு செய்த நிலையில் 56(41) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து ரிஷாப் பாண்ட்  6(7) ரன்னிலும், அதிரடி காட்டிய கொலின் இன்ங்ராம் 19(9) ரன்களிலும், அக்‌ஷர் பட்டேல் 1(1) ரன்னிலும் வெளியேறினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தினை பதிவு செய்தார்.

இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 58 (49) ரன்களும், ரூதர்போர்ட்டு 2 (2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக விஜோயின் 2 விக்கெட்டுகளும், முகமது சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

Next Story