பாளையங்கோட்டையில் தசரா திருவிழா: ஆயிரத்தம்மன் கோவில் முன்பு 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன


பாளையங்கோட்டையில் தசரா திருவிழா:  ஆயிரத்தம்மன் கோவில் முன்பு 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன
x
தினத்தந்தி 20 Sep 2017 9:30 PM GMT (Updated: 20 Sep 2017 1:18 PM GMT)

தசரா திருவிழாவையொட்டி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் முன்பு நேற்று காலையில் 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன.

நெல்லை,

தசரா திருவிழாவையொட்டி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் முன்பு நேற்று காலையில் 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன.

தசரா விழா

நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு தனிப்புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன், புது உலகம்மன் ஆகிய அம்மன் கோவில்களிலும் நேற்று முன்தினம் தசரா விழா தொடங்கியது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. பேராச்சி அம்மன் சப்பரம் தவிர மற்ற 11 அம்மன் கோவில் சப்பரங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது.

சப்பர அணிவகுப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பெண்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிப்பட்டனர். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. அங்கிருந்து மேல தெருவழியாக, வடக்குத்தெருவிற்கு சென்று ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு அதிகாலை 6 மணிக்கு அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. பின்னர் அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது சிறப்பு தீபாராதனையும், பந்தலில் கொடி நட்டுதலும் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெறும்.

சூரசம்ஹாரம்

வருகிற 30–ந் தேதி (சனிக்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. ஆயிரத்தம்மன், பேராச்சி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் காலை 10 மணிக்கு துர்கா பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சப்பர பவனியும் நடக்கிறது.

1–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். அப்போது அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மதியம் 12 மணிக்கு அந்த சப்பரங்கள் பாளையங்கோட்டை கோபால்சாமி கோவில் திடலை வந்து அடையும். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.


Next Story