படகுகள் கவிழ்ந்து நடுகடலில் தத்தளித்த 26 மீனவர்கள் மீட்பு


படகுகள் கவிழ்ந்து நடுகடலில் தத்தளித்த 26 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:45 PM GMT (Updated: 20 Sep 2017 9:56 PM GMT)

படகுகள் கவிழ்ந்து நடுகடலில் தத்தளித்த 26 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

மும்பை,

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரபிக்கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் ரத்னகிரி, தபோலி அருகே உள்ள புர்ரோந்தி என்ற இடத்தில் 29 மீனவர்களுடன் கடலுக்குள் சென்ற படகு கடல் சீற்றத்தால் நடுகடலில் கவிழ்ந்தது.

இதுகுறித்து ரத்னகிரியில் உள்ள கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர். அவர்கள் 26 மீனவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கடலில் விழுந்த 3 பேரை காணவில்லை. அவர்களை கடலோர காவல் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.இதுகுறித்து ரத்னகிரி கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மாயமான 3 மீனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறு தேசிய பேரிடர் மீட்பு படையினரை கேட்டு கொண்டுள்ளோம், என்றார்.

மீட்பு பணியில் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் மீன் பிடிக்க சென்றதே விபத்திற்கு காரணம் என உள்ளூர் மீனவர் ஒருவர் கூறினார்.


Next Story