‘எம்.ஜி.ஆர். படித்த பள்ளி தரம் உயர்த்தப்படும்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


‘எம்.ஜி.ஆர். படித்த பள்ளி தரம் உயர்த்தப்படும்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 29 Nov 2017 8:31 PM GMT)

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

* கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். படித்த யானையடி நகராட்சி தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். அந்த பள்ளிக்கு எம்.ஜி.ஆர். நினைவுப்பள்ளி என்றும் பெயர் சூட்டப்படும். அப்பள்ளியில் சத்துணவு மையம் தொடங்க ஆணையிட்டு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அங்கு தனி சமையலறை கட்டப்படும்.

* திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருவோணம் ஒன்றியத்தில் கிழமங்கலம் ஆகிய கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும்.

* கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சை மற்றும் வல்லம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகங்களில் தலா ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் 1000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் நபார்டு வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்படும்.

* பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மின்னணு ஏலமுறை மென்பொருள் வசதி, மின்னணு ஏலக்கொட்டகை, பொதுவான வகைப்படுத்தும் கருவிகள் மற்றும் எடைமேடை போன்ற வசதிகள் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

*தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரில் மின் வினியோகத்தை மேம்படுத்தும் பொருட்டு, பந்தநல்லூரில் புதிய துணை மின் நிலையம் ரூ.4½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* மின்நகரில் ரூ.5 கோடியே 97 லட்சம் செலவிலும், திருமலைசமுத்திரத்தில் ரூ.10 கோடியே 40 லட்சம் செலவிலும் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். பூண்டி துணை மின் நிலையம் ரூ.2 கோடியே 59 லட்சம் செலவிலும், ஊரணிபுரம் துணை மின் நிலையம் ரூ.2 கோடியே 12 லட்சம் செலவிலும் தரம் உயர்த்தப்படும்.

* தஞ்சை மின்பகிர்மான வட்டத்தில் புதியதாக கணினி முறையில் மின்தடை பழுது நீக்கும் மையம் ரூ.44 லட்சத்து 55 ஆயிரம் செலவில் அமைக்கப்படும். பேராவூரணி துணை கோட்ட அலுவலகம் ரூ.35 லட்சம் செலவில் கோட்ட அலுவலகமாக மாற்றி அமைக்கப்படும்.

* கும்பகோணம் நகரில் காவிரி ஆற்றின் குறுக்கே நடைபாலத்துடன் கூடிய ரெகுலேட்டர் அமைப்பதற்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே தளமட்ட சுவர் ரூ.5 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

*திருவிடைமருதூர் தாலுகா பவுண்டரிகாபுரம் கிராமத்தில் மாங்குடி வாய்க்காலுக்கு நீர் வழங்கும் பொருட்டு கீர்த்திமன்னார் ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி செலவில் தளமட்ட சுவர் அமைக்கப்படும்.

*ஒரத்தநாடு தாலுகா தலையாமங்கலம் கிராமத்தில் தலையாமங்கலம் ஏரி வடிகாலின் குறுக்கே ரூ.50 லட்சம் செலவிலும், வண்ணான்கொல்லைபட்டி கிராமத்தில் பனங்குளம் உபரி நீர்போக்கின் குறுக்கே ரூ.70 லட்சம் செலவிலும், அருமலை கிராமத்தில் அருமலை வடிகாலின் குறுக்கே ரூ.50 லட்சம் செலவிலும், வெள்ளூர் மற்றும் தொண்டராம்பட்டு கிராமங்களில் பட்டுவானாச்சி வடிகாலின் குறுக்கே ரூ.95 லட்சம் செலவிலும் தடுப்பணைகள் அமைக்கப்படும்.

*தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ரூ.3 கோடியே 28 லட்சம் செலவில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும். மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதலுதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக, ரூ.1 கோடி மதிப்பில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை, அதனைச் சார்ந்த கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு ஆகிய மருத்துவமனைகளில் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.

* தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பில் புற்று நோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவி மையம், ரூ.12 கோடி செலவில் ஒருங்கிணைக்கப்பட்ட தீவிர தாய்-சேய் பராமரிப்பு மையம் (சீமாங்க்) ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்படும். தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டணமில்லா கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்.

*தஞ்சை மாவட்டத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதிதாக மருந்து கிடங்கு அமைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றும் 309 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவபுள்ளி விவரங்களை பதிவு செய்திட ரூ.30 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கையடக்க கணினிகள் வழங்கப்படும்.

*சேதுபாவாசத்திரம் தாலுகாவில் ரூ.31 கோடியே 35 லட்சம் செலவில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும். பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைகளில் ரூ.4 கோடியே 20 லட்சம் செலவில் முதல்நிலை பரிந்துரை மையம் அமைக்கப்படும். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்புடன் ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பில் சீமாங் அறுவை அரங்கம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஏற்படுத்தப்படும்.

* கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ், எண்டோஸ்கோப் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தொற்று கிருமி நீக்கு பிரிவு, புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

* வல்லம் அரசு மருத்துவமனையில் ரூ.16 லட்சம் மதிப்பில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

* கும்பகோணம் நகருக்கான மூன்றாம் கட்ட புறவழிச்சாலை 9.42 கி.மீ நீளத்திற்கு ரூ.28 கோடி செலவில் அமைக்கப்படும். இதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

* சின்னப்புலிக்காடுராகவாம்பாள்புரம் சாலை யிலும், சாலியமங்கலம்- சடையார்கோவில் சாலையிலும் தலா ரூ.1½ கோடி செலவில் பாலங்கள் கட்டப்படும். ஊரணிபுரம் - கரியவிடுதி சாலையில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் பாலம் கட்டப்படும். இடையாத்தி கிராமத்தில் வெள்ளாளர் தெரு மற்றும் ஆதிதிராவிடர் தெருவுக்கு இடையே வாய்க் காலின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

* திருநீலக்குடி-கடலங்குடி சாலையில் ரூ.1 கோடியே 98 லட்சம் செலவிலும், கணபதி அக்ரஹாரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியே 80 லட்சம் செலவிலும், திருவிசைநல்லூர் - திருபுவனம் சாலையில் ரூ.2 கோடியே 60 லட்சம் செலவிலும், புதுவிடுதி - வெட்டுவாக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் ரூ.1½ கோடி செலவிலும், தஞ்சை ரெட்டிப்பாளையம் கிராமத்தில் கொற்கை பஞ்சாயத்துக்கும் சேசம்பாடி பஞ்சாயத்துக்கும் இடையில் ரூ.1 கோடியே 98 லட்சம் செலவிலும், நெய்வாசல் - அரசப்பட்டு - ஊசிமதகு சாலையில் ரூ.1 கோடியே 97 லட்சம் செலவிலும், ஆலத்தூர்- புலவஞ்சி சாலையில் ரூ.1½ கோடி செலவிலும் புதிய பாலங்கள் கட்டப்படும்.

* திருவையாறு நகருக்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, அறந்தாங்கி - சாயல்குடி மாநில நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை முதல் ஆவணம் கைகாட்டி வரை 69.20 கி.மீ நீளம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கு ரூ.3 கோடியே 2 லட்சம் செலவில் தளஆய்வு மற்றும் சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

* அய்யம்பேட்டை - கணபதிஅக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே அய்யம்பேட்டையில் உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. திருக்காட்டுப்பள்ளி - செங்கிபட்டி - பட்டுக்கோட்டை சாலை வெண்ணாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story