தஞ்சையில், 4 நாட்கள் நடக்கிறது: அகில இந்திய கூடைப்பந்து போட்டி


தஞ்சையில், 4 நாட்கள் நடக்கிறது: அகில இந்திய கூடைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 11 Oct 2018 10:30 PM GMT (Updated: 11 Oct 2018 7:26 PM GMT)

தஞ்சையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி 4 நாட்கள் நடக்கிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் ராபின்சன் ஜூனியர் கூடைப்பந்து கழகம் இணைந்து 6-ம் ஆண்டாக அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி வருகிற 13-ந் தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

போட்டிகள் தஞ்சை கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழகம், தெலுங்கானா, ராஜஸ்தான், கேரளா, அரியானா உள்ளிடட மாநிலங்களை சேர்ந்த 12 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த அணிகளும் கலந்து கொள்கின்றன.

போட்டிகள் தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்கி 10 மணி வரையும், மாலையில் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையும் மின்னொளியில் நடக்கிறது.

போட்டிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தமிழக கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்சத்யன், செயலாளர் ஆதவ் அர்ஜூனன் ஆகியார் கலந்து கொள்கிறார்கள்.

தொடக்க விழாவை தொடர்ந்து 14-ந் தேதி நடைபெறும் விழாவில் கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

நிறைவு விழாவில் இந்திய கூடைப்பந்து முன்னாள் வீரரான பஞ்சாப்பை சேர்ந்த அஜ்மீர் சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜராஜசோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை தலைவர் இளவரசு, நிறுவனரும், சர்வதேச கூடைப்பந்து நடுவருமான துரைராஜூ ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Next Story