போதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்


போதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 7:47 PM GMT)

புதுவையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் குட்கா, ஆன்ஸ், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் காந்திவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் 3 பைகளுடன் அந்த வழியாக சென்றார்.

உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும், அவர் வைத்திருந்த பையில் குட்கா, ஆன்ஸ் போன்ற போதைப்பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் நீடராஜப்பர் வீதியில் உள்ள ஒரு கடையில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வருவதாக தெரிவித்தார். உடனே போலீசார் மணிகண்டன் குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு குடோனில் மூட்டை, மூட்டையாக போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த கடையின் உரிமையாளர்களான திருமுடிநகர் பகுதியை சேர்ந்த அர்மத்சிங் என்பவரது மகன்கள் பாபுலால் (28), மோகன்லால் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

போதைப்பொட்கள் விற்றவர்களை அதிரடியாக கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story