கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2018 10:30 PM GMT (Updated: 13 Dec 2018 8:21 PM GMT)

சுவாமிமலை அருகே குடும்ப தகராறில் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 39). டிரைவர். இவருடைய மனைவி நிர்மலா(28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி மதியம் முருகானந்தம் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த முருகானந்தம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை நிர்மலா மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் தீ மளமளவென நிர்மலாவின் உடல் முழுவதும் பரவியது.

உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் அலறி துடித்துக்கொண்டிருந்த நிர்மலாவை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முருகானந்தம் மீது சுவாமிமலை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்மலா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசி அய்யா ஆகியோர் முருகானந்தம் மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story