கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி


கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 9:55 PM GMT)

மயிலாடுதுறை அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு மயிலாடுதுறை தாலுகா திருவிழந்தூர், அருண்மொழிதேவன் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2017-18-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு செய்து இருந்தனர். ஆனால் தற்போதுவரை விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணியிடம் மனு அளித்து உரிய பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story