திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேச்சு


திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 8:45 PM GMT)

திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் என்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேசினார்.

திருச்சி,

நான் பத்தாண்டு காலம் திருச்சி மாநகராட்சியின் மேயராக இருந்த போது திறமையான தூய்மையான நிர்வாகத்தை தந்தேன். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தேன். ஆனால் இப்போது பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. நான் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருவதாக மக்கள் வேதனையுடன் கூறினார்கள். என்னை நீங்கள் வெற்றி பெற செய்தால் காவிரியின் பல இடங்களில் தடுப்பணை கட்டி நீராதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பதோடு குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைப்பேன். திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன். நான் எனக்காக மட்டும் வாக்கு கேட்கவில்லை. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றியின் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் செந்தில் பேசும்போது ‘கடந்த தேர்தலின்போது மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் போடவில்லை. இன்னும் ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தாலும் போடமாட்டார். ரூ.350-க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் தற்போது ஆயிரம் ரூபாயை தொட்டு விட்டது. எனக்கு பின்னரும் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் அவர் மறைந்து 100 நாட்களில் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் ஆட்சியை அடகு வைத்து விட்டனர். உண்மையான இரட்டை இலை தற்போது மோடியிடம் சிக்கி கொண்டு விட்டது. அதனால் தான் ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக மோடி கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டவேண்டும்’ என்றார்.

அ.ம.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர்.

Next Story