விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை


விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 30 April 2019 10:15 PM GMT (Updated: 30 April 2019 8:09 PM GMT)

விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு காலனி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்றவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ரங்கசாமியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை.

இந்நிலையில் நேற்று மாலை விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பம் ஏரியில் ரங்கசாமி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எப்படி இறந்தார்?, யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை ஏரியில் வீசிவிட்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story