ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2019 11:00 PM GMT (Updated: 2 Jun 2019 8:49 PM GMT)

கோடை விடுமுறை முடிவடைந்ததையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,900 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஒகேனக்கல்லில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே குளித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசல் துறையில் இருந்து பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல், பெரியபாணி வழியாக கூட்டாறு மணல் திட்டு வரை சென்றனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை, தர்மபுரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் அதிக அளவில் மீன்கள் கிடைத்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கினர். இதனால் மீன்கள் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் கூட்டம் அலைமோதியதால் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆலாம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, நடைபாதை, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story