வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு, விவசாயிகள் வலியுறுத்தல்


வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு, விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:30 PM GMT (Updated: 4 Jun 2019 10:12 PM GMT)

வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அணைப்பட்டி ஒட்டியுள்ள வைகையாற்று பகுதியில் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. வைகையாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயமும் உள்ளது.

எனவே வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ருக்மணி, வத்தலக்குண்டு மண்டல துணை தாசில்தார் மணிமேகலை, நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், நிலக்கோட்டை தாலுகாவில் கடந்த பல ஆண்டுகளாக வைகையாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணல் அள்ளுவதை தடுக்க அணைப்பட்டி, விளாம்பட்டி, விருவீடு, வத்தலக்குண்டு ஆகிய 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்க வேண்டும். வைகையாற்று படுகையை ஒட்டியுள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், வைகையாற்றில் கடந்த ஆண்டுகளை விட தற்போது மணல் அள்ளுவது வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மர்மநபர்கள் இரவு நேரங்களில் மணல் அள்ளி வருகின்றனர். இதை தடுக்க கிராம பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மணல் அள்ளுவதை தடுக்க முடியும் என்றார்.

இதைத்தொடர்ந்து வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க விவசாயிகள், தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் டேனியல், வருவாய் ஆய்வாளர்கள் சரவணமுத்து, ராமசாமி மற்றும் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story