புறா பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த 3 சிறுவர்கள்: தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்


புறா பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த 3 சிறுவர்கள்: தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:39 PM GMT (Updated: 4 Jun 2019 10:39 PM GMT)

பனமரத்துப்பட்டி அருகே புறா பிடிக்க முயன்று கிணற்றில் விழுந்த 3 சிறுவர்களை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூமலைக்கரடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவரது தோட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பெண்கள் அரளிப்பூ பறிப்பதற்கு சென்றுள்ளனர்.

அப்போது தோட்டத்தின் அருகில் இருந்த கிணற்றில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்று பெண்கள் எட்டிப்பார்த்த போது 3 சிறுவர்கள் உள்ளே இருந்து கூச்சலிட்டுள்ளனர். 120 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில், சிறிதளவு மட்டுமே தண்ணீர் இருந்தது.

கிணற்றில் 120 அடி ஆழத்தில் சிக்கி கொண்ட சிறுவர்கள் குறித்து, அங்கிருந்தவர்கள் சேலம் தீயணைப்பு படையினருக்கும், பனமரத்துப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் சிராஜ்அல்வநி‌‌ஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி 3 சிறுவர்களையும் உயிருடன் மீட்டனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் 3 பேரும், பனமரத்துப்பட்டி காந்தி நகரை அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூபதியின் மகன்கள் ஹரி (வயது 14), கவுதம் (12) மற்றும் முருகனின் மகன் சுரே‌‌ஷ் (14) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கிணற்றில் இருந்த புறாவை பிடிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். அதில் ஹரி முதலில் கிணற்றில் இறங்க முயன்றுள்ளான். கயிறு அறுந்து கீழே விழுந்ததால் அவனை மீட்பதற்காக மற்ற சிறுவர்கள் இருவரும் கிணற்றில் இருந்த குழாயை (பைப்) பிடித்து கீழே இறங்கி உள்ளனர்.

அவர்கள் மீண்டும் மேலே ஏற முடியாததால் கத்தி கூச்சலிட்டு உள்ள நிலையில், தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டது குறிப்பிடத்தக்கது. புறா பிடிக்க முயன்று 3 சிறுவர்கள் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story