தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வேலை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வேலை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Aug 2019 11:00 PM GMT (Updated: 5 Aug 2019 9:24 PM GMT)

தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வேலை கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

கடையம் ஒன்றியம் மந்தியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாகைகுளம், ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், பிள்ளைகுளம், மகராஜபுரம், அகம்பிள்ளை குளம், மந்தியூர் ஆகிய 7 ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் நுழைவு வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், “மந்தியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, ஏரி, குளம் புதர்மண்டி கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த ஆண்டு ஏரி, குளங்களை சுத்தம் செய்ய பொதுப்பணித்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் மேற்கண்ட 7 கிராம மக்களும் வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், நெல்லை, அம்பை உள்ளிட்ட தாலுகாக்களை சேர்ந்த புதிரை வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பல ஊர்களில் இருந்து மாணவ- மாணவிகள் சீருடையுடன் வந்து இருந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், “எங்கள் சமுதாய மக்கள் சமூகப்பணி செய்து வருகிறார்கள். எங்கள் சமுதாயத்துக்கு சாதி சான்றிதழ் இல்லை. இதனால் அடிப்படை கல்வி கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் சாதி சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராதாபுரம் தொகுதி செயலாளர் ஒயிஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் ஆனைகுளம் கிராமம் துலுக்கர்பட்டிக்கும், இறைப்புவாரி கிராமம் மாவடிக்கும் இடையே நம்பியாறு உள்ளது. இந்த கிராமங்களுக்கு இடையே ஆற்றுப்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி கடந்த 6 மாதமாக நடைபெறவில்லை. இதனால் சுற்று வட்டார பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், அங்கு தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், “நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 16 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு குறைந்த அளவே சம்பளம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் கற்பகம் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “நெல்லை அருகே உள்ள கரையிருப்பு பகுதி மக்களுக்கு தனி பாதை அமைத்து தர வேண்டும், அந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் சீராக வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் பாலன், ஜோசப், தியாகராஜன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வாகை கணேசன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “பாளையங்கோட்டை மகராஜநகரில் உழவர் சந்தை உள்ளது. அதில் எதிரே உள்ள காலி இடத்தில் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தி வருகிறார்கள். தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களிடையே எந்த கருத்தும் கேட்காமல் திடீரென்று பூங்கா அமைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் பூங்கா அமைக்காமல், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தாமிரபரணி நெல்லை கால்வாய் நயினார்குளம் பாசன சங்க தலைவர் நெல்லையப்பன் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில், “நெல்லை நயினார்குளத்தில் இரண்டாவது மடைக்கு மேல் கட்டப்பட்டுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நயினார்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வேலைகளை சங்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களிலும் தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் ஒரு வங்கியை சேர்ந்த அதிகாரி வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார். வங்கிக்கு வரும் பெண்களிடம் உள்நோக்கத்தோடு பல மணி நேரம் காக்க வைக்கிறார். இது வங்கியின் நற்பெயரை களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை வேறு கிளைக்கு இட மாற்றம் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story