படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 116 விவசாயிகளுக்கு ரூ.9½ லட்சம் நிவாரணம் கலெக்டர் தகவல்


படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 116 விவசாயிகளுக்கு ரூ.9½ லட்சம் நிவாரணம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 9:02 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கி, பாதிக்கப்பட்ட 116 விவசாயிகளுக்கு ரூ.9½ லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

நாமக்கல்,

வேளாண்மைத்துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நேற்று மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை நாமக்கல்லில் நடத்தின. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசியதாவது:-

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இப்புழு மக்காச்சோள செடியின் இலை, குருத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சாப்பிட்டு பயிர் வளர்ச்சியை தாக்குகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பயிர் வளர்ச்சி முற்றிலும் அழிவுற்று பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ரசாயன மருந்துகள்

புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு ரசாயன மருத்துகளை பயன்படுத்தினாலும், மருந்து செயல்படுவதற்குள் படைப்புழு பயிரினை சேதப்படுத்தி விடுகிறது. அதிக அளவில் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால் நாளடைவில் புழு தனது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்கிறது. படைப்புழுவை அழிக்க பயன்படுத்துகின்ற மருந்தானது வளர்கின்ற செடி, பயிர் மற்றும் அறுவடை செய்த பிறகு தானியத்தில் இருப்பதால், அதனை பயன்படுத்தும்போது கெடுதல் ஏற்படுகிறது.

மக்காச்சோள படைப்புழுவினை கட்டுப்படுத்திட வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பூச்சியியல் துறை பேராசிரியர்கள் ஆராய்ச்சி்யின் மூலமாக புதிய ஒருங்கிணைந்த பூச்சிகள் நிர்வாக முறை திட்டத்தினை கண்டுபிடித்து உள்ளார்கள். இந்த முறையில், விவசாயம் மேற்கொள்வதற்கு முன்பாக நிலத்தினை எவ்வாறு தயார் செய்வது, எவ்வாறு விதை விதைப்பது உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முறைகளை மேற்கொள்வதால் படைபுழுவினை கட்டுப்படுத்த முடியும்.

ரூ.9½ லட்சம்

மாவட்டத்தி்ல் கடந்த ஆண்டு மக்காச்சோள படைப்புழு தாக்குதலுக்கு 116 விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.9½ லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தங்களது பெயரினை பயிர்காப்பீட்டு திட்டத்தி்ல் பதிவு செய்து உள்ளார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் அகிலா, வேளாண் இணை இயக்குனர் சேகர், வேளாண் துணை இயக்குனர் ராஜகோபால், பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர், வேளாண் பூச்சியியல் துறை பேராசிரியர்கள் சாத்தையா, முத்துகிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மற்றும் மேலாண்மை முறைகள் குறித்த கண்காட்சியினை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Next Story