தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 8:34 PM GMT)

திருச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி 26-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் லீலாவேலு. இவர் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியாகவும் உள்ளார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி(வயது 35) சங்கிலியாண்டபுரம் பகுதியில் கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். பாண்டிச்செல்வியின் கணவர் ராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் குழந்தைகளுடன் வசித்து வந்த பாண்டிச்செல்வி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, “பாண்டிச்செல்விக்கு, திருமணமான ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அவர், ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் குடித்தனம் நடத்த வரும்படி வாக்குவாதம் செய்துள்ளார். இது பற்றி அறிந்த அவரது சகோதரர் அங்கு சென்று பாண்டிச்செல்வியை சமாதானம் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்தே அவர் நள்ளிரவுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்“ என்றனர்.

லீலாவேலு சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்றார். இது குறித்து அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட பாண்டிச்செல்விக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

Next Story