ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:00 PM GMT (Updated: 3 Oct 2019 7:07 PM GMT)

முத்துப்பேட்டை அருகே கஜா புயலால் சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்களுடன் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள மேலதொண்டியக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 44-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பலத்த சேதமடைந்தது. இதனால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு பழமையான கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் கல்வி பயலும் சூழல் இருந்தது. இதனால் மாணவர்களை, பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப தயங்கி வந்தனர். மேலும் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று கஜா புயலில் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்தும், பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டியும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு உள்ள மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பாலையன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்கொடி, துணைத்தலைவி பிரியா, கிராம கமிட்டி நாட்டாமை ராமையன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜே‌‌ஷ், வருவாய் அலுவலர் கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தட்சுதானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை கவனத்திற்கு எடுத்து சென்று நிதி பெற்று இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக சீரமைத்து தரப்படும். அதற்கு முன் தற்போது மாணவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில எதிரே உள்ள இடத்தில் போதிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story