செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 4 July 2020 12:38 AM GMT (Updated: 4 July 2020 12:38 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 9 பேர் பலியானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நேற்று மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட அழகேசன் தெரு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் 85 வயது முதியவர், சீத்தலைசாத்தனார் தெருவை சேர்ந்த 72 வயது முதியவர், மாதா கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிக்கும் 35 வயது வாலிபர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த 30 வயது வாலிபர், சதாசிவம் சாலையை சேர்ந்த 42 வயது ஆண், ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த 53 வயது ஆண், எஸ்.ஆர்.எம். மருந்து பணியாளர் குடியிருப்பில் வசிக்கும் 22, 23, 24 வயது இளைஞர்கள், 38 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கம்பர் தெருவை சேர்ந்த 21 வயது இளைஞர், காமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர், ராஜேஸ்வரி தெருவை சேர்ந்த 40 வயது ஆண், ஸ்ரீவள்ளி நகர் பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், ஜே.டி.நகர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊரப்பாக்கம் செந்தில் நகர் 5-வது தெருவில் வசிக்கும் 24 வயது இளைஞர், குளக்கரை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 22 வயது இளைஞர், மண்ணிவாக்கம் சண்முகா நகர் 2வது தெருவை சேர்ந்த 66 வயது ஆண், குமரன் நகர் 5 வது தெருவில் வசிக்கும் 26 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,139 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,113 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 82 வயது மூதாட்டி, 75 வயது, 70 வயது, 68 வயது, 67 வயது முதியவர்கள், 54 வயது ஆண், 50 வயது ஆண், 40 வயது ஆண், 39 வயது ஆண் ஆகிய 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபர், சென்னகுப்பம் ஊராட்சி ஒரகடம் பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,272 ஆனது. இவர்களில் 925 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,321 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் தண்டுமா நகரை சேர்ந்த 40 வயதான வக்கீலுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானது. இவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பதவி வகித்து வருகிறார்.

இவருடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,343 ஆனது. இவர்களில் 2,793 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,468 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஊத்துக்கோட்டை சாவடி தெருவை சேர்ந்த 50 வயதான ஒருவர் கொரோனாவால் பலியானார். இவருடன் பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆனது.

Next Story