புதுச்சேரியில் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Nov 2020 9:13 PM GMT (Updated: 10 Nov 2020 9:13 PM GMT)

புதுச்சேரியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று புதுப்புது உச்சத்தை தொட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவும், குண மடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தும் வருவது ஆறுதல் அளித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் 102 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொசப்பாளையம் சாத்தாணி வீதியை சேர்ந்த 67 வயது மூதாட்டியும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சுரக்குடியை சேர்ந்த 75 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

36 ஆயிரமாக உயர்வு

ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 901 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 1,071 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 343 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 728 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 604 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 496 பேர் புதுச்சேரியிலும், 57 பேர் காரைக்காலிலும், 44 பேர் ஏனாமிலும், 7 பேர் மாகியிலும் உயிரிழந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 95.35 சதவீதமாகவும் உள்ளது. 

Next Story