சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2021 11:37 AM GMT (Updated: 10 May 2021 11:37 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 451 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த லியாகத் அலி (வயது 26) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 451 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லியாகத் அலியிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

 


Next Story