பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது


பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2021 9:37 PM GMT (Updated: 9 Oct 2021 9:37 PM GMT)

பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரளா, மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

2 பேர் கைது

  பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் போதைப்பொருட்களை விற்பனை செய்ய 2 பேர் காத்து நிற்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள பூங்காவின் முன்பு சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். 

மேலும் அவர்கள் கைகளில் வைத்திருந்த பைகளை வாங்கி சோதித்து பார்த்தனர். அப்போது அந்த பைகளில் போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

போதைப்பொருட்கள் பறிமுதல்

  விசாரணையில அவர்கள் 2 பேரும் கேரளா, மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் 2 பேரும் சேர்ந்து குறைந்த விலைக்கு போதைப்பொருட்களை வாங்கி அதை கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான 3 கிலோ 750 கிராம் கஞ்சா, ரூ.4½ லட்சம் மதிப்பிலான 300 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 2 பேர் மீதும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story