என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்


என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது: ப சிதம்பரம்
x

என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது என்று ப சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதி மந்திரி சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்க துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனவே, அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது. 

அத்துடன் ஜூன் 5-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில், விசாரணை முடிந்து வெளியில் வந்த பிறகு ப சிதம்பரம் தனது டுவிட்டரில், அமலாக்கத்துறை விசாரணை குறித்து பதிவிட்டுள்ளார். சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ என் மீது முதல் தகவல் அறிக்கையை பதியாமலேயே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. எந்த குற்றச்சாட்டும் என் மீது சுமத்தப்படவில்லை. விசாரணையில் எனது வாக்குமூலத்தை தட்டச்சுசெய்யவே பாதி நேரத்தை அமலாக்கத்துறை எடுத்துக்கொண்டது 


Next Story