மாம்பழங்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என கூறிய பிதேவுக்கு மீண்டும் சிக்கல்


மாம்பழங்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என கூறிய பிதேவுக்கு மீண்டும் சிக்கல்
x
தினத்தந்தி 14 July 2018 8:36 AM GMT (Updated: 14 July 2018 8:36 AM GMT)

எனது தோட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என கூறிய பிதேவுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

நாசிக்,

சிவ பிரதீஷ்தான் இந்துஸ்தான் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் சாம்பாஜி பிதே.

மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் அவரது தலைநகராக ராய்காட் நகரம் இருந்தது.  இந்த நிலையில், சிவாஜியின் அரியாசனம் இந்நகரில் மீண்டும் இடம் பெறுவதற்காக, இந்த மாத தொடக்கத்தில் பொது பேரணி ஒன்றை பிதே நடத்தினார்.  இதில் அவர் பேசும்பொழுது, எனது தாயாரை தவிர வேறு யாரிடமும் இந்த தகவலை கூறவில்லை.  எனது தோட்டங்களில் சில மாமரங்களை நான் வளர்த்து வருகிறேன்.

இதுவரை குழந்தை இல்லாத 180 தம்பதியினர் என்னிடம் இருந்து இந்த பழங்களை பெற்று சென்றுள்ளனர்.  அவர்களில் 150 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறினார்.  ஒரு தம்பதி, தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென விரும்பினால் அவர்கள் இந்த மாம்பழங்களை உண்ட பின்னர் அவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும்.

இந்த மாம்பழம் மலட்டு தன்மை உள்ளவர்களுக்கு மிக பயன் தரும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் சுகாதார துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து நாசிக் மாநகராட்சி பிதேவுக்கு கடந்த ஜூனில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இவரிடம் வாங்கிய மாம்பழங்களை உண்டு பலன் பெற்ற தம்பதிகளின் பெயர் மற்றும் அவர்களது முகவரிகளை தெரிவிக்கும்படி கேட்டு கொண்டது.

தொடர்ந்து, மாநகராட்சியின் அறிவுரை குழுவானது, குழந்தை பிறப்பதற்கு முன் அதன் பாலின தேர்வை வெளிப்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளது பி.சி.பி.என்.டி.டி. (பாலின தேர்வு தடை) சட்டத்தின்படி விதிமீறல் ஆகும் என கண்டறிந்துள்ளது.  இதனால் பிதே குற்றவாளியாக கணக்கில் கொள்ளப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.  அவர் இந்த விவகாரத்தில் பதிலளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.  

அவர் மீது வழக்கு தொடர அறிவுறுத்தல் குழு முடிவு செய்துள்ளது.
கடந்த ஜனவரி 1ந்தேதி நடந்த பீமா-கோரேகான் சாதி வன்முறை வழக்கில் பிதே ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

Next Story