கொரோனா தொற்றின் லேசான அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு


கொரோனா தொற்றின் லேசான அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 28 April 2020 11:24 PM GMT (Updated: 28 April 2020 11:24 PM GMT)

கொரோனா தொற்றின் லேசான அறிகுறி கொண்டவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தாலும், சில இடங்களில் பாதிப்பு அறவே இல்லாமலும் இருக்கிறது. சில இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீண்டும் அந்தப் பகுதியில் புதிய தொற்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையும் இருக்கிறது.

பொதுவாக சளி, காய்ச்சல், இருமலினால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத் துறையினரின் கவனத்துக்கு வந்தால் அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பது வழக்கமாக உள்ளது. சளி பாதிப்பு கொரோனா அறிகுறியாக மாறும் பட்சத்தில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், லேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள், வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வசதி, அவர்களது வீடுகளில் இருக்க வேண்டும். அவர்கள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆரோக்ய சேது செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அறிகுறி உள்ளவரை கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் தவறாமல் வழங்க வேண்டும்.

சுவாசிப்பதில் சிரமம், மார்பில் தொடர்ந்து வலி போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இவ்வாறான வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Next Story