நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்


நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 2 April 2021 11:39 PM GMT (Updated: 2 April 2021 11:39 PM GMT)

மராட்டியத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆட்டி படைத்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

குறிப்பாக இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும், நடிகருமான அபிசேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பிறகு அவர்கள் உடல் நலம் தேறினார்.

இந்த ஆண்டிலும் கொரோனா மீண்டும் விசுவரூபம் எடுத்து தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பலர் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘வீட்டில் உள்ள அனைவரும் நேற்று கொரோனா பரிசோதனை செய்தோம். இன்று பரிசோதனை முடிவு வந்தது. நல்லவிதமாக யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அபிசேக் பச்சனை தவிர அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டோம். அவர் தற்போது வெளியே இருக்கிறார்’’ என்றார்.

மேலும் அமிதாப் பச்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அபிசேக் பச்சன் சினிமா படப்பிடிப்புக்காக வெளிமாநிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story