இத்தாலி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக, கேரள மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இத்தாலி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக, கேரள மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2021 1:42 AM GMT (Updated: 20 Aug 2021 1:42 AM GMT)

இத்தாலி கப்பல் படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக, கேரள மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

தமிழக, கேரள மீனவர்கள் சுட்டுக்கொலை
கேரள கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி படகில் சென்று மீன்பிடித்த தமிழக மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோரை அந்த வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.முதலில் குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் கேரள போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு, 2 இத்தாலி வீரர்களும் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறை விடுப்பில் அவர்கள் இத்தாலி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ரூ.10 கோடி இழப்பீடு
ஆனால் அவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று இத்தாலி அரசு தெரிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து சர்வதேச, ஐ.நா. கோர்ட்டுகளை இந்தியா நாடியது. இதனையடுத்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இத்தாலி அரசு சார்பில் மத்திய அரசிடம் ரூ.10 கோடி வழங்கப்பட்டது.இதற்கிடையே இத்தாலி வீரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த இழப்பீட்டு தொகையை கோர்ட்டில் செலுத்த மத்திய அரசுக்கு கடந்த ஜூன் 9-ந்தேதி உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கை கடந்த ஜூன் 15-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு, வழக்கை முடித்து வைப்பதாகவும், தலா ரூ.4 கோடியை கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், ரூ.2 கோடியை காயமடைந்த படகு உரிமையாளருக்கும் கேரள ஐகோர்ட்டு மூலம் வழங்க உத்தரவிட்டனர்.

இழப்பீடு வழங்க தடை
இந்த சூழ்நிலையில் ரூ.10 கோடி இழப்பீட்டு தொகையில் ரூ.2 கோடியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி படகில் உடனிருந்த 7 மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க படகு உரிமையாளருக்கு உத்தரவிட்டதுடன், இத்தாலி செலுத்திய ரூ.10 கோடி இழப்பீட்டு தொகையை இந்திய மீனவர்களுக்கு வழங்குவதை கேரள ஐகோர்ட்டு நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story