என்னை ஏமாத்திட்டு இன்னொருவரை எப்படி காதலிக்கலாம்...? ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை
பெலகாவி அருகே, ஓடும் பஸ்சில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்து உள்ளது. காதலை கைவிட்டதால் வெறிச்செயலில் ஈடுபட்ட அத்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
பெலகாவி,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா படா கிராமத்தை சேர்ந்தவர் வந்தனா(வயது 30). இதுபோல மங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்(28). பிரவீனுக்கு, வந்தனா அத்தை மகள் ஆவார்.
இந்த நிலையில் பிரவீனும், வந்தனாவும் காதலித்து வந்தனர். மேலும் திருமணம் செய்யாமல் 2 பேரும் கணவர், மனைவி போல் ஒன்றாகவும் வாழ்ந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் பிரவீனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரிடம் இருந்து வந்தனா விலகியதாக தெரிகிறது. மேலும் பிரவீனுடனான காதலை வந்தனா கைவிட்டதாக தெரிகிறது.
மேலும் வந்தனா, இன்னொரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த பிரவீன், வந்தனாவிடம் அந்த வாலிபருடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு வந்தனா மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் வந்தனா கே.எம்.ஆலூர் என்ற இடத்தில் இருந்து படா கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பஸ்சில் ஒரு இடத்தில் இருந்து ஏறிய பிரவீன், வந்தனாவின் அருகில் அமர்ந்தார். பின்னர் வாலிபர் உடனான காதலை கைவிட்டு தன்னை மீண்டும் காதலிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு வந்தனா மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், ஓடும் பஸ்சில் வைத்தே வந்தனாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பிரவீனை தடுக்க முயன்றனர். ஆனால் பயணிகளை நோக்கி கத்தியை காட்டி பிரவீன் மிரட்டினார். இதனால் பயணிகள் ஒதுங்கி நின்றனர். பின்னர் ஆத்திரம் தீராத வந்தனாவை, பிரவீன் குத்தினார். இதனால் வேதனையில் வந்தனா கதறினார். இருந்தாலும் அவரது கழுத்தை கத்தியால் பிரவீன் அறுத்தார். இதில் ரத்தவெள்ளத்தில் வந்தனா துடிதுடித்து பரிதாபமாக இறந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பின்னர் வந்தனாவின் உடலை பஸ்சில் இருந்து கீழே பிரவீன் தள்ளினார்.
மேலும் பஸ்சின் படிக்கட்டில் நின்று அவர் போஸ் கொடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கேஸ்வரா போலீசார் அங்கு சென்று பிரவீனை கைது செய்தனர். மேலும் வந்தனாவின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைதான பிரவீன் மீது சங்கேஸ்வரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஓடும் பஸ்சில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story