பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி மைசூரு வருகை


பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி மைசூரு வருகை
x

பந்திப்பூர் புலிகள் காப்பக 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி மைசூருவுக்கு வருகிறார். அவர் தங்க உள்ள ஓட்டலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

மைசூரு:

பந்திப்பூர் புலிகள் காப்பக 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி மைசூருவுக்கு வருகிறார். அவர் தங்க உள்ள ஓட்டலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

பிரதமர் மோடி வருகை

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதுவரை பிரதமர் மோடி 7 முறை கர்நாடகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில், வருகிற 8-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் கர்நாடகம் வர உள்ளார். தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வருகிறார்.

ஓட்டலில் சோதனை

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் 'ப்ளூ மவுண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள், அதாவது 9-ந்தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் பந்திப்பூருக்கு செல்கிறார். அங்கு நடக்கும் புலிகள் காப்பக 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு முதுமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி மைசூருவில் தங்கும் ஓட்டலில் அவரது பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர். மேலும் பந்திப்பூருக்கும் சென்று சோதனை நடத்தினர்.


Next Story