வீடு புகுந்து கொள்ளை; 6 பேர் கைது


வீடு புகுந்து கொள்ளை; 6 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:46 PM GMT)

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அத்திப்பள்ளி,:

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கொள்ளை கும்பல்

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தன. அத்திப் பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குமார் லே-அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் கவுடா. இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டு ஆவார். இவரது வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்தனர். அவர்கள் தேவராஜ் கவுடா மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோல் ஒசக்கோட்டை அருகே அனுகொண்டனஹள்ளியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்தது. ஆனேக்கல் டவுன் பகுதியில் வசித்து வந்த கீர்த்தனா என்ற பெண்ணின் வீட்டிற்குள் மர்மகும்பல் நுழைந்தது. அவர்கள் கீர்த்தனாவின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக அந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் நிலையங்களில் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுனா தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. அவர் அறிவுரையின்பேரில் ஆனேக்கல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

ஓசூரை சேர்ந்தவர்கள்

இந்த நிலையில் இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தமிழ்நாடு ஓசூரை சேர்ந்த கிரண், சதீஷ், அய்யனார், மதன் சதீஷ், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோர் என்பதும், அவர்கள் தான் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் தக்க சமயத்தில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெள்ளிப்பாத்திரங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.


Next Story