கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி அரசு பரிசீலனை செய்யும்; ஓ.பன்னீர்செல்வம்


கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி அரசு பரிசீலனை செய்யும்; ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:24 AM GMT (Updated: 29 Nov 2018 10:24 AM GMT)

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.  இதனை தொடர்ந்து நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் நிதியுதவி கேட்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழு 3 நாட்களாக புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்து சென்றுள்ளது.

இந்த நிலையில், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கஜா புயல் இதுவரை வந்த புயல்களை விட மிக தீவிரமானது, சேதமும் அதிகமானது.  கஜா புயல் பாதிப்பை அரசியலாக்க சில எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.  இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறினார்.

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Next Story