நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ந்தேதி வரை நீட்டிப்பு; தேசிய தேர்வு முகமை


நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ந்தேதி வரை நீட்டிப்பு; தேசிய தேர்வு முகமை
x
தினத்தந்தி 29 Nov 2018 4:06 PM GMT (Updated: 29 Nov 2018 4:10 PM GMT)

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7ந்தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

சென்னை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 30ந்தேதி (நாளை) கடைசி நாளாகும். தற்போது கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பல்வேறு கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்தும், கிராமங்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலையும் உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் சேதம் அடைந்துள்ளன.

இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தை நீட்டித்து தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தொலைபேசி மூலமும் பேசப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7ந்தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

Next Story