எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் பிளாட்பாரம் பயணிகள் கோரிக்கை


எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் பிளாட்பாரம் பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 9 Dec 2018 8:33 PM GMT)

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை, 

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் இருந்து இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடை மேம்பாலம்

சென்னை வாசிகளின் பயணத்தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது மின்சார ரெயில்கள் தான். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். மின்சார ரெயில் மூலம் பெரும்பாலான இடங்களுக்கு விரைவாகவும், குறைந்த செலவிலும் செல்ல முடிகிறது.

சென்னை கடற்கரை– செங்கல்பட்டு இடையே செல்லும் மின்சார ரெயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் ரெயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் அகலமாக இருக்கும். பயணிகள் எளிதில் ரெயில் நிலையத்துக்கு வருவதற்கும், வெளியே செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

விரிவாக்க பணி

முக்கிய ரெயில் நிலையமான எழும்பூரில் 10, 11–வது நடைமேடைகள் மின்சார ரெயில்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் மிகுதியாக காணப்படுகிறது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்சார ரெயில்களில் கூட்டம் வழக்கத்தை விட கூட்டம் மிகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 10, 11–வது நடைமேடையில் உள்ள நடை மேம்பாலத்தை அகலப்படுத்த ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தற்போது எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள மின்சார ரெயிலுக்கான, டிக்கெட் கவுண்ட்டர்கள் அருகே உள்ள நடை மேம்பாலத்தில் முதல்கட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

மூடும் அபாயம்

இந்த பணிகளை முடிக்க அவ்வப்போது இரவு நேர ரெயில்களை ரத்து செய்து வருகின்றனர். பணியை விரைந்து முடிக்க அந்த நடை மேம்பாலத்தை சில நாட்களுக்கு மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு நடை மேம்பாலம் மூடப்பட்டால் மின்சார ரெயிலுக்கு வரும் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில், டிக்கெட் எடுத்துவிட்டு நடைமேடை 9 வழியாக ரெயில் நிலையத்தின் மறுபக்கத்துக்கு சென்று அங்குள்ள நடை மேம்பாலத்தை பயன்படுத்தி தான் நடைமேடை 10, 11–க்கு செல்ல முடியும். இதனால் பயணிகள் அலைச்சலுக்கு ஆளாவது மட்டுமின்றி அவசர நேரத்தில் மின்சார ரெயிலில் ஏற முடியாத நிலை ஏற்படும்.

அவசர சூழலில் பயணிகள் தண்டவாளத்தை கடக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவசர சமயத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:–

இருபுறமும் இறங்கும் வசதி

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பயணிகள் செல்லும் நடை மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணியை ரெயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த நடை மேம்பாலம் தற்காலிகமாக மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் நடைமேடையில் இருந்து வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் மிகவும் அவதிக்கு ஆளாக நேரிடும்.

சென்னை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் இந்த பிரச்சினைகளை உடனே கருத்தில் கொண்டு பூங்கா, மாம்பலம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள, இருபுறமும் ஏறி இறங்கும் வகையில் எழும்பூர் ரெயில் நிலைய 11–வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இதனால் மின்சார ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன், பயணிகள் எளிதில் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லவும், அருகே இருக்கும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தை பயன்படுத்தவும் உதவும். இந்த நடவடிக்கையை நடை மேம்பாலத்தை மூடுவதற்கு முன்பாக செயல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பஸ் நிலையம், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோருக்கு மிகுந்த பயன்உண்டாகும். நடைமேம்பாலத்திலும் கூட்ட நெரிசல் குறைவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story