கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Aug 2020 11:30 PM GMT (Updated: 12 Aug 2020 7:59 PM GMT)

கொரோனாவில் இருந்து தப்பிக்க, தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா ஊரடங்கு கண்துடைப்பு நாடகம். எனவே தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும், சென்னையில் 1 லட்சத்தையும் தாண்டியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. ‘3 நாளில் போய் விடும், 10 நாளில் குறைந்து விடும்’ ‘இது பணக்காரர்கள் வியாதி’ என்றெல்லாம் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

திறமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை, திட்டமிட்டு முறையாக எடுக்க முடியாமல், வெற்று நம்பிக்கையை ஊட்டி, மக்களை நட்டாற்றில் தவிக்க விட்ட அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வி இன்றைக்கு இந்திய அளவில் கொரோனா நோய்த் தொற்றில் இரண்டாவது பெரிய மாநிலமாக உருவெடுத்து தமிழ்நாட்டிற்கு அவப்பெயரையும், தமிழக மக்களுக்கு பெரும் பதற்றத்தையும் தேடித் தந்து விட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டை மூடியதில் தாமதம், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்ததில் அவசரம், ஊரடங்கு காலத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுத வைத்தது, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் உயிர்த்தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.50 லட்சம் இழப்பீட்டை ரூ.25 லட்சமாக கருணையின்றிக் குறைத்து இன்றுவரை ஒருவருக்குக் கூட இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பது, உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பைக் காற்றில் பறக்க விட்டது, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு நோய்க்குள்ளான ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சத்தை இதுவரை வழங்காதது எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது கூட 1.5 லட்சம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்தியே தீருவோம் என்று அடம் பிடிப்பது என்று முதல்-அமைச்சர் மாநில பேரிடர் தலைவர் என்ற முறையில் செய்த அனைத்து நிர்வாக தோல்விகளுக்கும் தனியாக ஒரு பெரிய அகராதியே வெளியிடலாம்.

கொரோனா பரவி ஏறக்குறைய 7 மாதங்கள் கழித்து இப்போது தான் முதல்-அமைச்சர் உண்மை நிலவரம் உணர ஆரம்பித்திருப்பது போல் பேசத் தொடங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் பேசிய முதல்-அமைச்சர், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது’ என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஆகவே இதுவரை பிரதான எதிர்க்கட்சி தலைவராக, தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி, நான் முன்வைத்த பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஏற்கவில்லை என்றாலும் இனியாவது மக்களின் பாதிப்பைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.

குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம், உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கி, 3 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா பாதிப்பு மேலும் சில லட்சங்களைத் தொட்டுவிடாமல் இருக்க அனைத்து மருத்துவப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளி-கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து, கோவில்கள் தவிர எல்லாம் செயல்பட அனுமதித்துவிட்டு, இதனை ஊரடங்கு என்று சொல்வதைப் போல சட்டக்கேலிக்கூத்து இருக்க முடியாது. இந்த ஊரடங்கைக் கண்துடைப்பு நாடகமாகவே மக்களில் பெரும்பாலானவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்.

மதிப்பிற்குரிய தமிழக மக்களே! அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அ.தி.மு.க. அரசை இனியும் சிறிதுகூட நம்பியிருக்காமல் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ‘சுய பாதுகாப்பு’ நடவடிக்கைகளில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் உயிர்ப்பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story