‘எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை' - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை


‘எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை - ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2021 7:33 PM GMT (Updated: 30 Sep 2021 7:33 PM GMT)

எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்தது இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 28-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று கூறியிருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. வரலாறு என்பது நின்று, நிலைத்து நிற்கும் கல்வெட்டை போன்றது. அப்படிப்பட்ட வரலாற்றுக்கு சொந்தமாக வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் வரலாறே, ஒரு சிலரை தான் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது. அந்த ஒரு சிலரில் ஒருவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். துரைமுருகன் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

'என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்.ஜி.ஆர்.' என்றும், 'நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்' என்றும் பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டு, தன்னுடைய திரைப்படங்களின் பாடல்கள் வாயிலாக தி.மு.க.வின் வெற்றிக்கு வித்திட்ட எம்.ஜி.ஆரை பார்த்து, அண்ணாவின் மறைவிற்கு பிறகு அடுத்த நிலையில் உள்ள அனுபவம் மிக்கவர் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக வருவார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், மு.கருணாநிதியை முதல்-அமைச்சராக்கிய எம்.ஜி.ஆரை பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது கடும் கண்டனத்துக்குரியது.

எம்.ஜி.ஆர். எந்த காலத்திலும், யாருக்கும் துரோகம் செய்ததில்லை. துரோகம் செய்யவேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.

எம்.ஜி.ஆரை இழிவுப்படுத்தும் வகையில் பேசும் துரைமுருகனின் இந்த பேச்சு, அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோகம் கத்தியை போன்றது. மற்றவர்களை குத்தும்போது சுகமாக இருக்கும். நம்மை திரும்பி குத்தும்போது கொடூரமாக இருக்கும் என்பதை துரைமுருகன் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story