கடலூரில் அரசு ஆஸ்பத்திரியை துப்புரவு ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி


கடலூரில் அரசு ஆஸ்பத்திரியை துப்புரவு ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி
x

கடலூரில் அரசு ஆஸ்பத்திரியை துப்புரவு ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில், தனியார் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே துப்புரவு ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், துப்புரவு ஊழியர்கள் பணிக்கு செல்போன் கொண்டு வந்துள்ளார்களா? என சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், தங்களை சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிக்கு செல்லாமல் ஆஸ்பத்திரியை முற்றுகையிடுவதற்காக ஒன்று திரண்டனர்.

இதுபற்றி அறிந்த அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் விரைந்து வந்து, முற்றுகையிட முயன்ற பெண் துப்புரவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பேரில் துப்புரவு ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து பணிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story