நெல்லை- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் ரத்து


நெல்லை- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் ரத்து
x

கோப்புப்படம்

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

ஆரல்வாய்மொழி- கன்னியாகுமரி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணி மற்றும் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு, நெல்லை வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, கொல்லம் செல்லும் சிறப்பு ரெயில் நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறபட்டு, கன்னியாகுமரி வரும் சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு, கன்னியாகுமரி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, கொச்சுவேலி வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691) வருகிற 31-ந் தேதி வரை நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் வரும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12689) இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் செல்லும் அந்தியோதியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இன்று முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை நெல்லையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும். அதே போல நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12690) மார்ச் 31-ந் தேதி மட்டும் நெல்லையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story