காதல் மனைவி கொலை: செல்போனில் யாரிடமோ வெகு நேரம் பேசியதால் கொன்றேன்..! கணவன் பரபரப்பு வாக்குமூலம்


காதல் மனைவி கொலை: செல்போனில் யாரிடமோ வெகு நேரம் பேசியதால் கொன்றேன்..! கணவன் பரபரப்பு வாக்குமூலம்
x

நாகர்கோவில் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகர்கோவில்:

நடத்தை சந்தேகத்தால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் செல்போனில் யாரிடமோ வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்ததால் கொன்றதாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆன்டனி பெனிஸ்டர் (வயது 30). இவருடைய மனைவி பத்மா (30). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை பத்மா வீட்டு படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இது குறித்து பத்மாவின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தன் மனைவி பத்மாவை தானே கழுத்தை நெரித்து கொன்றதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆண்டனி பெனிஸ்டர் கூறியதாவது:-

"நானும், பத்மாவும் காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம்.

இதையடுத்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு பிரிந்து செல்லலாம் என்றும், அது வரை ஒரே வீட்டில் வசிக்கலாம் என்றும் முடிவு செய்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை என் மகனும், மகளும் பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த என் மனைவி பத்மா தொடர்ந்து செல்போனில் யாரிடமோ வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்ததால் இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவர் நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறது. நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன? என்று என்னிடம் கேட்டார்.

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது கழுத்தை நெரித்தேன். இதில் பத்மா மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். வீட்டிற்கு வந்தபோது தான் என் மனைவி இறந்திருக்கும் தகவல் தெரியவந்தது. உடனே நான் போலீசில் சரணடைந்தேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துகொண்டனர். பின்னர் ஆண்டனி பெனிஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story