'அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு


அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
x

எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்துதான் தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்திவைக்க அனுமதிக்க வேண்டும் எனவும், மீண்டும் கிளாம்பாக்கத்திற்கு செல்லும்போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்திவைக்க அனுமதிக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகளை பொறுத்தவரை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உணவகங்கள், இலவச மருந்தகங்கள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், தூரத்தைத் தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் வசதிக்காக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காணும் வகையில் வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதோடு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.




Next Story