தை அமாவாசையையொட்டிசுருளி அருவியில் புனித நீராடிய பக்தர்கள்:முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


தை அமாவாசையையொட்டிசுருளி அருவியில் புனித நீராடிய பக்தர்கள்:முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 21 Jan 2023 6:45 PM GMT)

தை அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

தேனி

தை அமாவாசை

தை அமாவாசையையொட்டி ஆண்டுதோறும் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். அதன்படி தை அமாவாசை நாளான நேற்று வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஆற்றில் நீராடிய பக்தர்கள் அருகே உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் வழிபாடு நடத்தினர். அப்போது சிவன் மற்றும் விநாயகருக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதேபோல், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. இங்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று தை அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

புனித நீராடிய பக்தர்கள்

அவர்கள் அருவியில் புனித நீராடி விட்டு முன்னோர்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அங்குள்ள பூத நாராயணன், சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுருளி அருவியில் குளிப்பதற்கு ஆண், பெண்களுக்கு தனியாக ரூ.30 கட்டணம் வசூல் செய்வது வழக்கம். ஆனால் நேற்று தை அமாவாசையையொட்டி கட்டணம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தை அமாவாசையையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சிறப்பு வழிபாடு

பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டதுடன், அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை தானமாக வழங்கினர். போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவில், பரமசிவன் மலைக் கோவில், பிச்சாங்கரை கீழ சொக்கநாதர் மற்றும் மேலசொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று தை அமாவாசையையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story