மும்பையில் இருந்து வந்த ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பை..! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!


மும்பையில் இருந்து வந்த ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பை..! திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
x

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்தப்பட்டு குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்தப்பட்டது தொடர்பாக சில வாலிபர்கள் வடசேரி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக இன்று அதிகாலை நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனைத்தொடர்ந்து கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் உள்ள இருக்கையின் கீழ் கேட்பாரற்று பை ஒன்று இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அதனை திறந்து பார்த்து, அதில் 3 பொட்டலங்களாக மொத்தம் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தல் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.


Next Story